காங்கிரஸுக்கு மாற்று யார்?- காந்திய மக்கள் இயக்கம் கணிப்பு

காங்கிரஸ், தன் போக்கை மாற்றிக் கொள்ளாமல், இதே வேகத்தில் பயணிக்குமானால் ஏற்படும் வெற்று இடத்தை நிரப்பிட ஓர் அரசியல் சக்தி தேவைப்படுகிறது என்று காந்திய மக்கள் இயக்கம் தெரிவித்துள்ளது. இந்த இயக்கத்தின் தலைவராக தமிழருவி மணியன் செயல்பட்டு வருகிறார்.   

Written by - K.Nagappan | Last Updated : Mar 11, 2022, 02:22 PM IST
  • காங்கிரஸ் நடந்துகொண்ட முறை 'நந்தவனத்தில் ஓர் ஆண்டி கதை'
  • காங்கிரஸ் வலுவிழந்ததற்குக் காரணம், தலைமைக் குடும்பத்தின் தவறான அணுகுமுறைகளே
  • குடும்பப் பிடியில் இருந்து காங்கிரஸ் வெளியே வர வேண்டும்.
காங்கிரஸுக்கு மாற்று யார்?- காந்திய மக்கள் இயக்கம் கணிப்பு  title=

5 மாநிலத் தேர்வு முடிவுகள் நேற்று வெளியான நிலையில், காங்கிரஸ் எந்த மாநிலத்திலும் ஆட்சியைப் பிடிக்கவில்லை. 4 மாநிலங்களில் பாஜகவும், பஞ்சாப்பில் ஆம் ஆத்மியும் வெற்றி பெற்றுள்ளன. இந்நிலையில் காங்கிரஸுக்கு மாற்றாக ஆம் ஆத்மி கட்சி வருவதற்கான வாய்ப்பு உள்ளது என்று காந்திய மக்கள் இயக்கம் கணித்துள்ளது.

இது தொடர்பாக காந்திய மக்கள் இயக்கத்தின் மாநிலப் பொதுச் செயலாளர் பா.குமரய்யா வெளியிட்ட அறிக்கையில், ''நடந்து முடிந்த ஐந்து மாநில சட்டமன்றத் தேர்தல் முடிவுகள், பஞ்சாப் தவிர மீதமுள்ள மாநிலங்களில் பாஜக தனித்து ஆட்சி அமைக்க வாய்ப்புள்ள சூழலை நோக்கி நகர்ந்து கொண்டு இருக்கிறது என்பதைத் தெளிவாக்குகிறது; கோவாவிலும், உத்தரகாண்டிலும், மணிப்பூரிலும் காங்கிரஸ் வலுவான போட்டியைத்  தரும் என்ற நம்பிக்கை சிதைந்து போயிருக்கிறது. பஞ்சாப் மாநிலத்தில் காங்கிரஸ் நடந்துகொண்ட முறை 'நந்தவனத்தில் ஓர் ஆண்டி கதை' தான்.

மேலும் படிக்க | மோசமான நிலையில் காங்கிரஸ் கட்சி..! தேர்தல் முடிவுகள் சொல்வது என்ன?

'காங்கிரஸ் தலைமைக் குடும்ப வாரிசுகளின் முதிர்ச்சியற்ற அணுகுமுறை' என்று முன்னாள் தளபதி அம்ரிந்தர் சிங் குறிப்பிட்டிருந்ததை நிரூபித்துக் காட்டியிருக்கிறது பஞ்சாப் முடிவுகள். ஆந்திரம் தொடங்கி, பல மாநிலங்களில் காங்கிரஸ் வலுவிழந்து போனதற்குக் காரணம், தலைமைக் குடும்பத்தின் தவறான அணுகுமுறைகளே. காங்கிரஸின் தொடர் தோல்விகள், பாஜகவுக்கு எதிரான அணிக்குத் தலைமை வகிக்கும் தகுதியை, அதனிடம் இருந்து பறித்துக் கொண்டே வருகின்றன. இனிமேலும் அந்தக் கட்சி, இந்திய அரசியலில் ஏற்புடையதாக இருக்க வேண்டுமானால், குடும்பப் பிடியில் இருந்து வெளியே வர வேண்டும்.

thamizharuvi maniyan

பாஜகவுக்கு மாற்றாக, காங்கிரஸ் தன்னை நிலைநிறுத்திக் கொள்ளாத சூழலில், தமிழகத்தில் திமுக, அதிமுகவுக்கு மாற்று இல்லாதது போல் இருக்கும் நிலை போன்று மத்தியிலும் உருவாகிவிடுமோ என்ற ஐயம் மெல்லத் தலை தூக்கி இருக்கும் காலகட்டத்தில், ஆம் ஆத்மி கட்சி, டெல்லியைத் தாண்டி பஞ்சாப்பில் அடி எடுத்து வைத்து இருப்பது வரவேற்கத்தக்கதே. டெல்லியில் மக்கள் நலன் சார்ந்த ஆட்சியைத் தருவதாக, மக்கள் நம்பிக்கை வைத்திருக்கின்ற அரவிந்த் கெஜ்ரிவால் பிம்பம், பஞ்சாப்பில் காங்கிரஸ் மீது வெறுப்படைந்த மக்களுக்கு மாற்று வழியைக் காண உதவியிருக்கிறது. 

சிறுசிறு மாநிலங்களில் தன்னுடைய கிளையைப் பரப்பத் தொடங்கியிருக்கும் ஆம் ஆத்மியின் முயற்சி, இந்தியா முழுவதும் வேர் பிடிக்கப் பல ஆண்டுகள் ஆகலாம். ஆனாலும் நாளுக்கு நாள் தேய்ந்து கொண்டிருக்கும் காங்கிரஸ், தன் போக்கை மாற்றிக் கொள்ளாமல், இதே வேகத்தில் பயணிக்குமானால் ஏற்படும் வெற்று இடத்தை நிரப்பிட ஓர் அரசியல் சக்தி தேவைப்படுகிறது என்பதை காந்திய மக்கள் இயக்கம் சுட்டிக் காட்ட விரும்புகிறது. அந்த இடத்தை அடைந்திட ஆம் ஆத்மிக்கு வாய்ப்பு இருக்கிறது. காலதேவனின் போக்கினை, கவனித்துக் கொண்டே இருப்போம்'' என்று தெரிவித்துள்ளார். 

மேலும் படிக்க | ‘பாடம் கற்போம், தொடர்ந்து பாடுபடுவோம்’ - காங்கிரஸ்

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

ஃபேஸ்புக்கில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!

Android Link - https://bit.ly/3hDyh4G

Apple Link - https://apple.co/3loQYeR

Trending News