வயதான தாயாரை பராமரிக்க விரும்பிய சாந்தன்! இலங்கைக்கு செல்லும் சாந்தனின் உடல்!

Madras High Court: சாந்தன் உடலை இலங்கைக்கு அனுப்பி வைக்க ஐ.ஏ.எஸ், ஐ.பி.எஸ். அதிகாரிகளை நியமித்து தேவையான நடவடிக்கைகளை எடுக்க தமிழக அரசுக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது  

Written by - Malathi Tamilselvan | Last Updated : Feb 29, 2024, 03:20 PM IST
  • சாந்தன் உடலை இலங்கைக்கு அனுப்பி வைக்கும் விவகாரம்
  • தமிழக அரசுக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவு
  • தாயை கவனிக்க செல்ல விரும்பிய சாந்தனின் உடல் இலங்கைக்கு செல்கிறது...
வயதான தாயாரை பராமரிக்க விரும்பிய சாந்தன்! இலங்கைக்கு செல்லும் சாந்தனின் உடல்! title=

Madras HC Order On Santhan Death : சாந்தன் உடலை இலங்கைக்கு அனுப்பி வைக்க ஐ.ஏ.எஸ், ஐ.பி.எஸ். அதிகாரிகளை நியமித்து தேவையான நடவடிக்கைகளை எடுக்க தமிழக அரசுக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. முன்னாள் பிரதமர் ராஜிவ் காந்தி கொலை வழக்கில் ஆயுள் கைதியாக இருந்த சாந்தன், உச்ச நீதிமன்ற உத்தரவின்படி விடுவிக்கப்பட்டு, அகதிகள் முகாமில் தங்க வைக்கப்பட்டிருந்தார். 

இந்நிலையில், இலங்கையில் நோய்வாய்ப்பட்டுள்ள தாயை கவனிப்பதற்காக தன்னை இலங்கை அனுப்பிவைக்க கோரி சாந்தம், சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தார்.

இந்த வழக்கு, நீதிபதிகள் சுரேஷ்குமார் மற்றும் குமரேஷ் பாபு அமர்வில் இன்று விசாரணைக்கு வந்த போது,  சாந்தனை இலங்கை அனுப்பவதற்கான பணிகள் நடைபெற்று வந்த நிலையில் துரதிருஷ்டவசமாக நேற்று உயிரிழந்துவிட்டதாக அரசுத்தரப்பில் தெரிவிக்கப்பட்டது. 

சாந்தனை இலங்கை அனுப்ப கடந்த 22ம் தேதி அனுமதி வழங்கப்பட்ட நிலையில் அவரை அனுப்பி வைக்காததேன் எனக் கேள்வி எழுப்பிய நீதிபதிகள், அவரது மருத்துவ அறிக்கைகளை தாக்கல் செய்ய உத்தரவிட்டு, விசாரணையை பிற்பகலுக்கு தள்ளி வைத்திருந்தனர்.

மேலும் படிக்க | பிரதமர் மோடி, பாஜக பெயரில் பேஸ்புக் மூலமாக மோசடி, ரூ.2997யை இழந்த துணி வியாபாரி

மதியம் வழக்கு மீண்டும் விசாரணைக்கு வந்த போது, தமிழக தலைமை குற்றவியல் வழக்கறிஞர் அசன் முகமது ஜின்னா ஆஜராகி, சாந்தனை இலங்கை அனுப்ப நடவடிக்கை எடுத்த போது, அவர் உடல் நலக்குறைவால் பாதிக்கப்பட்டதாகவும், பிப்ரவரி 27ம் தேதி ஏர் ஆம்புலன்ஸ் மூலம் அனுப்பிவைக்க முயற்சித்த போது சாந்தனுக்கு மாரடைப்பு ஏற்பட்டதாகவும், மறுநாள் அவர் மரணமடைந்து விட்டதாகவும் கூறி அறிக்கைகளை தாக்கல் செய்தார்.

தற்போது அவரது உடலை இலங்கை அனுப்பி வைக்கத் தேவையான நடவடிக்கைகளையும், உதவிகளையும் வழங்கி வருவதாக தெரிவித்த அவர், சாந்தன் உடல் பிரேத பரிசோதனை செய்யப்பட்டு, பதப்படுத்தப்பட்டுள்ளதாகவும், மாஜிஸ்திரேட் விசாரணையும் முடிந்து விட்டதாகவும் விளக்கினார்.

மத்திய அரசுத்தரப்பில் ஆஜரான கூடுதல் சொலிசிட்டர் ஜெனரல் ஏ.ஆர்.எல்.சுந்தரேசன், இலங்கை தூதரகத்தின் அனுமதி, பயண ஆவணம், இறப்பு சான்று மற்றும் பதப்படுத்தல் சான்றுகளை சமர்ப்பித்தால் தாமதமின்றி, சாந்தனின் உடலை இலங்கை கொண்டு செல்வதற்கான அனுமதியை மத்திய அரசு வழங்கும் எனத் தெரிவித்தார்.

மேலும் படிக்க | சாந்தனை ஏன் இலங்கைக்கு அனுப்பவில்லை...? தமிழ்நாடு அரசுக்கு உயர் நீதிமன்றம் கேள்வி!

இரு தரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதிகள்,  சாந்தன் உடலை இலங்கை கொண்டு செல்வதற்கு தேவையான ஆவணங்களை  வழங்க வேண்டும் எனவும், தூதரக அனுமதியையும் பெற்று மத்திய அரசுக்கு வழங்க வேண்டும் எனவும் தமிழக அரசுக்கு உத்தரவிட்டனர்.

இந்த நடைமுறைகளை விரைந்து முடிக்க ஏதுவாக ஐ.ஏ.எஸ், ஐ.பி.எஸ். அதிகாரிகளை நியமித்து, சாந்தன் உடலை இலங்கை கொண்டு செல்வதற்கு தேவையான உதவிகளை வழங்க வேண்டும் எனவும், சான்றுகளைப் பெற்றதும் உடனடியாக உரிய அனுமதியை மத்திய அரசு வழங்க வேண்டும் எனவும் நீதிபதிகள் உத்தரவிட்டனர்.

இந்த உத்தரவை நிறைவேற்றியது குறித்து மார்ச் 4ம் தேதி அறிக்கை அளிக்க வேண்டும் என மத்திய - மாநில அரசுகளுக்கு உத்தரவிட்ட நீதிபதிகள், விசாரணையை அன்றைய தினத்துக்கு தள்ளிவைத்தனர்.

மேலும் படிக்க | சென்னை ராஜீவ்காந்தி மருத்துவமனையில் சாந்தன் மரணம்! அதிகாரபூர்வ அறிவிப்பு

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..

முகநூல் - @ZEETamilNews

ட்விட்டர் - @ZeeTamilNews

டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 

வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r

அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

Trending News