ஷிகர் தவான் முதல் புவனேஷ்வர் குமார் வரை: இனி இந்திய அணியில் பார்க்க முடியாமல் போகும் 5 வீரர்கள்

இந்திய அணியில் இப்போது நிறைய வீரர்கள் விளையாடுவதற்கான தகுதியை பெற்றுவிட்டால், நீண்ட நாட்களாக விளையாடி வந்த ஷிகர் தவான் மற்றும் புவனேஷ்வர்குமார் ஆகியோருக்கான வாய்ப்பு என்பது கேள்விக்குறியாகியுள்ளது.  

Written by - S.Karthikeyan | Last Updated : Aug 13, 2023, 10:19 PM IST
  • சீனியர் பிளேயர்களுக்கு வாய்ப்பில்லை
  • தவான் இனி விளையாடுவது கடினம்
  • இஷாந்த் சர்மா, புவனேஷ்வருக்கும் அதே நிலை
ஷிகர் தவான் முதல் புவனேஷ்வர் குமார் வரை: இனி இந்திய அணியில் பார்க்க முடியாமல் போகும் 5 வீரர்கள் title=

இந்திய ஆண்கள் கிரிக்கெட் அணி இப்போது மேற்கிந்தியத் தீவுகளில் உள்ளது. அங்கு இரண்டு டெஸ்ட் மற்றும் மூன்று ஒருநாள் போட்டிகளில் விளையாடிய பிறகு, ஐந்து போட்டிகள் கொண்ட T20I தொடரில் பங்கேற்றுள்ளது. இதில் இரு அணிகளும் தலா 2 போட்டிகளில் வெற்றி பெற்று தொடரை நிர்ணயிக்கும் இன்றைய போட்டியில் களம் காண உள்ளனர். இந்திய அணியைப் பொறுத்தவரை எதிர்காலத்தைக் கருத்தில் கொண்டு சீனியர் பிளேயர்களுக்கு வாய்ப்பு கொடுக்காமல், இளைஞர்களுக்கு வாய்ப்பு கொடுத்து வருகிறது. அந்தவகையில் யஷஸ்வி ஜெய்ஸ்வால் மற்றும் திலக் வர்மா ஆகியோர் அணியில் சேர்க்கப்பட்டுள்ளனர்.  இவர்களின் வருகையால் இந்திய அணிக்காக மீண்டும் விளையாட முடியாமல் போகும் நிலைக்கு தள்ளப்பட்டிருக்கும் 5 வீரர்கள் பட்டியலை பார்க்கலாம்.

இந்த 5 வீரர்களுக்கு இனி இந்திய அணியில் வாய்ப்பு இல்லை

ஷிகர் தவான்: 

இந்திய அணியின் சிறந்த தொடக்க ஆட்டக்காரர்களில் ஒருவராக இருப்பவர் ஷிகர் தவான். அவர் இந்திய அணிக்காக 167 போட்டிகளில் விளையாடி மொத்தம் 6793 ரன்கள் குவித்துள்ளார். ஒருநாள் போட்டிகளில் இந்திய அணிக்கா அதிக ரன்கள் எடுத்தவர்களில் 10வது இடத்தில் உள்ளார் ஷிகர் தவான். அவர் 2015 மற்றும் 2019  ஆம் ஆண்டுகளில் நடைபெற்ற ஒருநாள் உலகக் கோப்பைக்கான இந்திய அணியில் இடம்பிடித்திருந்தார். 2013 சாம்பியன்ஸ் டிராபியில் தொடர் நாயகன் விருதை வென்றார். ஆனால் இப்போது இந்திய அணியில் அவருக்கு வாய்ப்பு கொடுக்கப்படுவதில்லை. 

கடைசியாக டிசம்பர் 10, 2022 அன்று சட்டோகிராமில் பங்களாதேஷுக்கு எதிராக நடைபெற்ற ஒருநாள் போட்டியில் அவர் விளையாடியதே கடைசி போட்டியாகும். ஆசிய கோப்பையில் இந்திய அணிக்கு கேப்டனாக இருப்பார் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், அந்த அணியிலும் அவர் இடம்பெறவில்லை. இதனால் ஓய்வு அறிவிக்க அதிக வாய்ப்புகள் இருக்கிறது.

மேலும் படிக்க | ICC World Cup 2023: ஒருநாள் உலகக்கோப்பையில் NO.4 இடத்தில் விளையாடப்போவது யார்? 

புவனேஷ்வர் குமார்: 

புவனேஷ்வர் குமார் டிசம்பர் 25, 2012-ல் பாகிஸ்தானுக்கு எதிராக டி20 போட்டியில் சர்வதேச கிரிக்கெட் போட்டியில் இந்திய அணிக்காக அறிமுகமானார். இதுவரை மொத்தம் 21 டெஸ்ட், 121 ஒருநாள் மற்றும் 87 டி20 போட்டிகளில் விளையாடியுள்ளார். அவர் டி20 போட்டிகளில் இந்தியாவுக்காக அதிக விக்கெட்டுகள் வீழ்த்தியவர்களில் இரண்டாவது இடத்தில் இருக்கிறார். ஆனால் நவம்பர் 22, 2022 முதல் இந்திய அணிக்காக அவர் விளையாடவில்லை. 

இஷாந்த் ஷர்மா:

கபில்தேவுக்குப் பிறகு 100-க்கும் மேற்பட்ட டெஸ்ட் போட்டிகளில் விளையாடிய இரண்டாவது இந்திய வேகப்பந்து வீச்சாளர் இஷாந்த் ஷர்மா. ஆனால் அவர் நவம்பர் 29, 2021 முதல் இந்தியாவுக்காக எந்தப் போட்டியிலும் விளையாடவில்லை. முகமது சிராஜ், முகேஷ் குமார் மற்றும் ஷர்துல் தாக்கூர், பிரசித் கிருஷ்ணா ஆகியோரின் வருகை இஷாந்த் சர்மாவின் இடத்தை கேள்விக்குறியாக்கியுள்ளது. இந்திய அணியில் அவர் எடுக்கப்படுவதும் இனி சாத்தியமில்லை. இந்தியாவுக்காக அவர் கடைசியாக 2016 ஆம் ஆண்டு ஜனவரி மாதம் ஒருநாள் போட்டியிலும், அக்டோபர் 10, 2013-ல் கடைசி டி20 போட்டியிலும் பங்கேற்றார்.

தினேஷ் கார்த்திக்: 

தினேஷ் கார்த்திக் இன்னும் சுறுசுறுப்பான கிரிக்கெட் வீரராக இருக்கிறார். கடந்த ஆண்டு டி20 உலகக் கோப்பையில் கூட விளையாடினார். ஆனால் சீரான ஆட்டத்தை வெளிப்படுத்த தவறியதால் உடனடியாக அணியில் இருந்து நீக்கப்பட்டுள்ளார். தற்போது அவருக்கு 38 வயது ஆவதால் மீண்டும் இந்திய அணிக்கு தினேஷ் கார்த்திக் விளையாடுவது என்பது சாத்தியமில்லை. ஏதேனும் மிராக்கிள் நடந்தால் அவரை மீண்டும் இந்திய அணியின் சீருடையில் பார்க்கலாம்.  

விருத்திமான் சாஹா: 

விக்கெட் கீப்பர்-பேட்ஸ்மேன் விருத்திமான் சாஹா 40 டெஸ்ட் மற்றும் ஒன்பது ஒருநாள் போட்டிகளில் இந்தியாவுக்காக விளையாடியுள்ளார். ஆனால் 2021 டிசம்பருக்குப் பிறகு அவர் ஒரு ஆட்டத்திலும் விளையாடவில்லை. 2023 ஆம் ஆண்டு நடைபெற்ற கவாஸ்கர் பார்டர் டிராபியில் கூட ரிஷப் பன்ட் இல்லாத சூழலிலும் சஹாவின் பெயர் அந்த இடத்துக்கு பரிசீலிக்கப்படவில்லை. அவர் விரைவில் சர்வதேச கிரிக்கெட் போட்டிகளில் இருந்து ஓய்வை அறிவிக்க அதிகமான வாய்ப்புகளே இருக்கின்றன.

மேலும் படிக்க | உலகக்கோப்பையில் திலக்வர்மாவை சேர்க்க வேண்டுமா? அஸ்வினுக்கு ரோகித் சர்மா பதில்

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

Trending News